தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தில் இரண்டாம் கட்ட கழிவுநீர் வெளியேற்றம்

1 mins read
c8c79425-4d47-4996-9a9b-07f41780c31a
ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து இரண்டாம் கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்றுவதற்கு முன்பாக அக்டோபர் 3ஆம் தேதி, அதிகாரிகள் தண்ணீர் மாதிரியைச் சோதித்தனர். - படம்: டெப்கோ

தோக்கியோ: ஜப்பானின் தோக்கியோ மின்சக்தி நிறுவனம் (டெப்கோ), வியாழக்கிழமை (அக். 5) காலை, ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து இரண்டாம் கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

அடுத்த 17 நாள்களுக்கு ஏறக்குறைய 7,800 கன மீட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை அது வெளியேற்றும். வெளியேறும் கழிவுநீர் பசிபிக் பெருங்கடலில் சென்று சேரும்.

இதனால் மனிதர்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ ஆபத்து நேராது என்று ஐக்கிய நாட்டு நிறுவன அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட உலகளாவிய அணுசக்தி அமைப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் ஜப்பானின் இந்த நடவடிக்கை, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சினமுறச் செய்துள்ளது.

முதற்கட்டமாக ஆகஸ்டில் ஜப்பான் இத்தகைய கழிவுநீரை வெளியேற்றியபோது, ஜப்பானிய கடலுணவுப் பொருள்கள்மீது சீனா ஒட்டுமொத்தத் தடையை விதித்தது.

ஜப்பானிய நிறுவனங்களுக்குப் பல்வேறு தொல்லைதரும் தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவை சீனாவிலிருந்து வந்ததாகக் கருதப்பட்டது.

ஃபுக்குஷிமா அணுமின் நிலையம், 2011ல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டது. அதிலிருக்கும் நீரில் இருந்து பெரும்பாலான கதிரியக்கப் பொருள்கள் சுத்திகரிக்கப்பட்டதாக ஜப்பான் கூறுகிறது.

ஆகஸ்ட் மாதம் முதற்கட்டக் கழிவுநீர் வெளியேற்றத்திற்குப் பிறகு பிரச்சினைகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்கிறது டெப்கோ.

குறிப்புச் சொற்கள்