யங்கோன்: மியன்மாரில் திருவாட்டி ஆங் சான் சூச்சிக்கு ஊழல் வழக்குகளில் விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஆறு வழக்குகளில் திருவாட்டி சூச்சிக்கு மொத்தம் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவற்றில் நான்கு வழக்குகள், திருவாட்டி சூச்சியின் தாயார் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறநிறுவனம் பெற்றுக்கொண்ட நன்கொடை தொடர்பானவை.
மேலும் இரு வழக்குகள், கட்டுமானத் துறை சார்ந்த பெரும் பணக்காரர் ஒருவரிடமிருந்து 550,000 அமெரிக்க டாலர் பெற்றுக்கொண்டது தொடர்பானவை.
தீர்ப்பை எதிர்த்து திருவாட்டி சூச்சியின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.
அவை நிராகரிக்கப்பட்டதாக மியன்மார் உச்ச நீதிமன்றத் தலைமை இயக்குநர் ஸாவ் மின் ஆங் தெரிவித்தார்.
ஆனால், மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
78 வயதாகும் திருவாட்டி சூச்சி, 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பொதுத்தேர்தலில் அவரது கட்சி ஊழல் செய்ததாக ராணுவம் குற்றம்சாட்டியது.
தொடர்புடைய செய்திகள்
மியன்மாரின் ராணுவ அரசாங்கம் தற்போது மேலும் ஆறு மாதங்களுக்கு நெருக்கடி நிலையை நீட்டித்துள்ளது. 2024 ஜனவரி 31ஆம் தேதி வரை அது நடப்பில் இருக்கும்.

