இணையத்தில் ஒரு பதின்ம வயது பெண்ணுக்கு ஆசை காட்டி, அவரது நிர்வாணப் படங்களை தனக்கு அனுப்பி வைக்கும்படி சொல்லிய குற்றத்துக்காகவும் சிறுவர்களின் ஆபாசப் படங்களை வைத்திருந்ததற்காகவும் சிங்கப்பூரரான ஏமஸ் யீக்கு அமெரிக்காவில் ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது சிறைவாசம் முடிய இன்னும் சுமார் மூன்று ஆண்டுகள் இருக்கும் பட்சத்தில் அவர் சனிக்கிழமை பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2021 டிசம்பர் 3ஆம் தேதியன்று 24 வயது யீக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சிறைவாசம் 2020 அக்டோபர் மாதத்திலிருந்து கணக்கிடப்பட்டது.
அவரது விடுதலை 2026 அக்டோபர் 8ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர், கட்டாய மேற்பார்வையின் கீழ் வைக்கப்படுவதன் காரணத்தால் பரோலில் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார் என்று அறியப்படுகிறது.
“ஆக, குற்றவாளி ஏமஸ் யீ, அக்டோபர் 7ஆம் தேதி முதல் இல்லினாய் சிறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறார்,” என்று சிறையின் அறிக்கை கூறியது.
யீ பரோலில் விடுவிக்கப்பட்டதன் காரணத்தை இல்லினாய் சிறை கூறவில்லை. இருப்பினும் ஏமஸ் யீயின் பெயர் பாலியல் தொடர்பான குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

