பேங்காக்: தாய்லாந்தின் பேங்காக் நகரில் செயல்படும் ஆடம்பரக் கடைத்தொகுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
அதில் உண்மையான துப்பாக்கி போல் மாற்றம் செய்யப்பட்ட போலி துப்பாக்கியும் தோட்டாக்களும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆயுதங்களைக் கொடுத்ததாக மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
அந்த மூவரும் இப்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த மூவரையும் மேலும் சில நாட்களுக்குத் தடுப்புக்காவலில் வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறை கோரிக்கை விடுத்தது.
பேங்காக்கின் யன்னாவா காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், தென் பேங்காக் குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்று அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.
புலன்விசாரணை தொடர்வதால் அந்தச் சந்தேகநபர்கள் தொடர்ந்து தடுப்புக் காவலில் இருக்கவேண்டும் என்றும் அவர்களுக்குப் பிணை கொடுக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
அப்போது மூன்று சந்தேகப் பேர்வழிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.
பேங்காக்கில் செயல்படும் சியாம் பேரகன் என்ற ஆடம்பரக் கடைத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஒரு துப்பாக்கியுடன் 14 வயதுப் பையன் கடைத் தொகுதிக்குள் சென்று அப்போது அங்கு இருந்தவர்களை நோக்கிச் சுட்டதில் இரண்டு பேர் மாண்டனர். ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
அந்தப் பையன் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்களைப் போட்டு வெடிக்கும் உண்மையான துப்பாக்கி அல்ல. ஆனால் அது அப்படி மாற்றப்பட்ட ஒரு போலி துப்பாக்கி என்பது தெரியவந்தது.
மாண்ட இருவரில் ஒருவர் சீனாவைச் சேர்ந்த சுற்றுப் பயணி. மற்றொருவர் மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஊழியர்.
பதியப்படாத துப்பாக்கிகளையும் வெடி மருந்தையும் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகவும் அனுமதி இன்றி அவற்றை விற்றதாகவும் அந்த மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே, சட்டவிரோத ஆயுதங்களைத் துடைத்து ஒழிக்க அதிகாரிகள் மேற்கொண்ட வேட்டையில் சனிக்கிழமை மேலும் இரண்டு பேர் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டது.