பாரிஸ்: இஸ்ரேல்-காஸா போர் சூழலில் உலகம் முழுவதும் அரசாங்கங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்துகின்றன.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்திற்கும இடையிலான மோதல் உலகின் பல நாடுகளிலும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகின்றன.
யூத இலக்குகள் தாக்கப்படலாம் என்ற அச்சம் தலைதூக்குவதால் அவற்றுக்கு பாதுகாப்பை அந்த நாடுகள் அதிகமாக்கி வருகின்றன.
பல நகர்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி உள்ளன.
இதுபற்றி கருத்து தெரிவித்த லண்டன் காவல்துறை, சுற்றுக்காவல் அதிகமாக்கப்பட்டு இருப்பதாகக் கூறியது.
பிரிட்டனில் யூத எதிர்ப்பு செயல்களும் பயங்கரவாதமும் சகித்துக்கொள்ளப்படமாட்டா என்று உள்துறை அமைச்சர் பிரேவெர்மன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் நியூயார்க், லாஸ் ஏஞ்சலெஸ், மயாமி, ஹூஸ்டன் உள்ளிட்ட பல நகர்களிலும் உள்ள யூத வழிபாட்டு இடங்களுக்குப் பாதுகாப்பு அதிகமாக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, நியூயார்க் நகரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதை எதிர்த்து சுமார் 200 இஸ்ரேல் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கனடாவில் மாண்ட்ரியல் நகரில் பல இடங்களிலும் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இஸ்ரேலைப் புறக்கணிக்கும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியதை தொலைக்காட்சி காட்டியது.
கனடாவில் யூத வழிபாட்டு இடங்கள், பள்ளிவாசல்களில் அதிக பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதனிடையே, பிரான்ஸ் முழுவதிலும் யூத வழிபாட்டு இடங்கள், யூதப் பள்ளிக்கூடங்களுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பயங்கரவாத செயல்களை முறியடிக்க 2015 முதல் பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் படை ஒன்றின் வீரர்களைப் பணியில் ஈடுபடுத்தும்படி வட்டார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இஸ்ரேல், அமெரிக்காவுக்குப் பிறகு பிரான்சில்தான் ஆக அதிகமாக 500,000க்கும் மேற்பட்ட யூதர்கள் வாழ்கிறார்கள். ஐரோப்பாவிலேயே பிரான்சில்தான் யூதர்கள் அதிகம்.
பொது ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு இருப்பதால் பிரான்சின் லியான் நகரில் திங்கட்கிழமை நடக்க இருந்த பாலஸ்தீன ஆதரவுப் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.