அமெரிக்க ராணுவ விமானத்தில் அளித்த நேர்காணலில்: அமெரிக்க தற்காப்புப் படைத் தளபதிகள் குழுவின் தலைவர் ஜெனரல் சார்ல்ஸ் கியூ பிரௌன், இஸ்ரேலில் நிலவும் நெருக்கடியில் தலையிட வேண்டாமென்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி மேலும் விரிவடைவதைத் தாம் விரும்பவில்லை என்றார் அவர்.
லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுவினர் இஸ்ரேலின் வடபகுதியில் உந்துகணைகளைப் பாய்ச்சிய நிலையில் அவரது எச்சரிக்கை வெளியானது.
இஸ்ரேல்மீது பாலஸ்தீன ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலுக்கு ஈரானும் உடந்தை என்று திங்கட்கிழமை வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியது. ஆனால் ஈரானுக்கு அந்தத் தாக்குதலில் நேரடியான பங்கு இருப்பதற்கான ஆதாரமோ உளவுத் தகவலோ அமெரிக்காவிடம் இல்லை.
ஈரானுக்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜெனரல் சார்ல்ஸ் கியூ பிரௌன், தலையிட வேண்டாம் என்பதே தமது செய்தி என்றார்.
பிரசல்ஸ் பயணத்தில் தம்முடன் விமானத்தில் வந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
திங்கட்கிழமை லெபனான்மீது இஸ்ரேல் குண்டுவீசியதில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மூவர் மாண்டதாகக் கூறப்பட்டது. லெபனானில் பாலஸ்தீனத் தரப்பு மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

