அசுன்சியோன்: லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயின் ஆகப் பெரிய சிறைச்சாலையில் கைதிகள் தீ மூட்டி குறைந்தது 11 காவலர்களைப் பிணைபிடித்தனர்.
பராகுவே தலைநகர் அசுன்சியோனுக்கு அருகே உள்ள கைதிகள் அதிகம் இருக்கும் டக்கும்பு சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்தது. பிணைபிடிக்கப்பட்டிருந்த இருவர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கைதிகளால் மூண்ட கலவரத்துக்கு எதிராக அரசாங்க, ராணுவப் படையினர் பதில் நடவடிக்கை எடுத்ததாக பராகுவேயின் உள்துறை அமைச்சர் என்ரிக்கே ரியேரா கூறினார். இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமுற்றதாகவும் அவர் சொன்னார்.
தங்களின் அன்புக்குரிய சிறைக்கைதிகளின் நிலையை அறிய குடும்பத்தார் டக்கும்பு சிறைச்சாலைக்கு வெளியே கவலையுடன் காத்துக்கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
பாழடைந்த நிலையில் இருக்கும் டக்கும்பு சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 4,000 கைதிகள் இருக்கின்றனர். சிறைச்சாலையில் குண்டர் கும்பல்கள் முழு ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.