அமெரிக்காவில் வசித்து வரும் ஆறு வயது சிறுமி பிரையன்னா பாட்லிக்கு வலிப்பு நோயினால் பக்க வாதம் ஏற்பட்டது.
கலிபோர்னியா லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு “ராஸ்முஸ்ஸென்ஸ் என்சஃபலைட்டிஸ்” (Rasmussen’s Encephalitis) எனும் அரிய வகை மூளை அழற்சி நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் சிறுமியின் மூளையின் ஒரு பகுதி சுருங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நோய்க்கு ஒரு பக்க மூளையின் செயல்பாட்டை நிறுத்துவதுதான் நிரந்தரத் தீர்வு என மருத்துவர்கள் கண்டறிந்தனர். மருத்துவர் ஆரோன் ராபிஸன் தலைமையில் 10 மணி நேரம் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. சிறுமியும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை விவரங்களையும் படங்களையும் அவரது தாயார் கிறிஸ்டல் பாட்லி தமது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த நோய்க்கு அழற்சி ஏற்பட்ட மூளையின் ஒரு பகுதியை நீக்குவதுதான் தீர்வாக இருந்தது. இந்தச் சாதனை மருத்துவ உலகின் முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.

