பிரசல்ஸ்: நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் கூட்டணி அடுத்த வாரம் பெரிய அளவில் அணுஆயுதப் பயிற்சியை நடத்தும் என்று அதன் தலைவர் வியாழக்கிழமை அறிவித்தார்.
உலக அளவிலான அணு ஆயுத பரிசோதனை தடை உடன்பாட்டில் இருந்து தான் விலகிக் கொள்ளப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், நேட்டோவின் பயிற்சி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நேட்டோவின் ‘ஸ்டெட்ஃபாஸ்ட் நூன்’ என்ற அந்தப் பயிற்சி ஆண்டுதோறும் நடக்கும் பயிற்சி, அது ஒரு வார காலம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும். இருந்தாலும் உண்மையான அணுகுண்டுகள் பயிற்சியில் இடம்பெறாது. வழக்கமாக விமானங்களும் எண்ணெய் நிரப்பும் விமானமும் பயிற்சியில் ஈடுபடும்.
அந்தப் பயிற்சி வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபரில் நடக்கும் ஒன்றுதான் என்று நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் பயிற்சி இத்தாலி, குரோஷியா, மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு உயரே நடக்கும் என்று அவர் கூறினார்.
“நேட்டோவின் அணுஆயுத அரணின் ஆற்றலை, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இந்தப் பயிற்சி உதவும்.
“நேட்டோ தன்னுடைய தோழமை நாடுகளைத் தற்காக்கும், பாதுகாக்கும் என்பது இந்தப் பயிற்சி மூலம் தெளிவாகத் தெரியவரும்,” என்றும் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் குறிப்பிட்டார்.
நேட்டோ நடத்தும் பயிற்சி, திங்கள்கிழமை தொடங்கி அக்டோபர் 26 வரை நடக்கும். அதில் 13 நேட்டோ நாடுகள் பங்கெடுக்கும். பலதரப்பட்ட விமானங்கள் அதில் பங்கெடுக்கும்.
பயிற்சியில் அமெரிக்காவின் பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள், அதி நவீன போர் விமானங்களும் கலந்துகொள்ளும். பயிற்சியின் பெரும் பகுதி ரஷ்ய எல்லையில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் நடக்கும்.
“உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்து இருக்கிறது. நேட்டோ நாடுகள் மீது படை எடுக்க எந்த ஒரு நாட்டிற்கும் துணிவு வரக்கூடாது.
“இதை உறுதிப்படுத்தும் அளவுக்கு வலுவான பாதுகாப்பு அரணை ஏற்படுத்துவதில் அணு ஆயுதங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன,” என்று திரு ஸ்டோல்டென்பர்க் தெரிவித்தார்.
உலகின் முக்கியமான நாடுகள் சேர்ந்து 1996ல் ஓர் உடன்பாடு கண்டன. அணு ஆயுதப் பரிசோதனையை எந்த நாடும் உலகின் எந்தப் பகுதியிலும் நடத்தக் கூடாது என்று அந்த உடன்பாடு தெரிவிக்கிறது.
அந்த உடன்பாட்டில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் கையெழுத்திட்டனர்.
என்றாலும் அமெரிக்கா அதை ஒருபோதும் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில், ரஷ்யா செவ்வாய்க்கிழமை ஓர் அறிவிப்பு விடுத்தது.
அமெரிக்காவைப் போலவே, அந்த உலக அணு ஆயுதப் பரிசோதனை தடை உடன்பாட்டில் இருந்து ரஷ்யாவும் விலகிக்கொள்ளப்போவதாக ரஷ்ய அரசதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
என்றாலும் அணுஆயுதப் பரிசோதனையை முதலாவதாக தான் நடத்தப்போவதில்லை என்றும் அமெரிக்கா முதலில் நடத்தினால் தொடர்ந்து தானும் அதை நடத்தப்போவதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.