பேங்காக்: சியாம் பேரகன் ஆடம்பரக் கடைத்தொகுதியில் இம்மாதம் 3ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 30 வயது தாய்லாந்து பெண்மணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இவருடன் சேர்த்து இச்சம்பவத்தில் இதுவரை மூவர் உயிரிழந்துவிட்டனர். குமாரி பென்பிவான் மித்தாம்பித்தாக், 30 அதிகாலை 2 மணியளவில் மரணம் அடைந்ததாகச் சமூக ஊடகம் வழியாக அறிவிக்கப்பட்டது.
அச்சம்பவத்தில் அவர் துப்பாக்கிக்காரனால் தலையிலும் விலாவிலும் தலா இருமுறை சுடப்பட்டு, மருத்துவமனையில் கடந்த 10 நாளகளாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார். உயிர் பிரியும்போது அவருடைய தாயார் உடன் இருந்தார்.
சம்பவத்தன்று, ஒரு துப்பாக்கியுடன் 14 வயதுப் பையன் கடைத்தொகுதிக்குள் புகுந்து அங்கு இருந்த வாடிக்கையாளர்களை நோக்கிச் சுட்டதில் அங்கேயே இருவர் மாண்டுபோயினர். அவர்களில் ஒருவர் சீனச் சுற்றுப்பயணி; மற்றொருவர் பர்மிய ஊழியர். இச்சம்பவத்தில் மேலும் ஐவர் காயம் அடைந்தனர். ஐவரில் ஒருவர் சீனர்; ஒருவர் லாவோஸ் நாட்டவர். மித்தாம்பித்தாக் உள்ளிட்ட மற்ற மூவரும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள்.
கைதுசெய்யப்பட்டுள்ள 14 வயது சிறுவன்மீது திட்டமிட்ட கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.