கோலாலம்பூர்: மலேசியாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போரைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மலேசியர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.
அதே சமயத்தில் பாலஸ்தீனர்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தேசிய பள்ளிவாசல் உட்பட நாட்டில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அருகே பேரணிகள் நடைபெற்றன.
தேசிய பள்ளிவாசல் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக நடந்து சென்றனர். இதில் முன்னாள் பிரதமர்கள் டாக்டர் மகாதீர் முகமது, முகைதீன் யாசின் உட்பட கட்சித் தலைவர்களும் பல அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பேரணியில் கலந்துகொண்டனர்.
வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முஹமது சாபு, இளையர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் ஆடம் அட்லி ஆகியோர் அவர்களில் சிலர்.
கோலாலம்பூரில் பலர் பாலஸ்தீன கொடிகளையும், பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். காஸா மீது இஸ்ரேல் வெடிகுண்டுகளை வீசி தாக்கியதில் 1,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதற்கு பேரணியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.