வெல்லிங்டன்: அரசியலில் ஈடுபட்டு மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் நியூசிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் 53 வயது கிறிஸ்டோபர் லக்சன்.
ஏர் நியூசிலாந்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான லக்சன், தொழிற்கட்சியின் ஆறு ஆண்டு ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார்.
சனிக்கிழமை நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லக்சனின் தேசிய கட்சியும் அதன் கூட்டணி கட்சியும் இணைந்து 61 இடங்களை கைப்பற்றியதாக தகவல்கள் கூறுகின்றன.
120 இடங்களில் 61 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சி அமைக்கும். நவம்பர் மூன்றாம் தேதி தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
லக்சன் 2021ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய கட்சியின் தலைவரானார்.
லக்சன் ஏர் நியூசிலாந்தின் தலைமை நிர்வாகியாக இருந்த காலகட்டத்தில் அதன் லாபத்தைப் பன்மடங்கு உயர்த்தினார். அதேபோல் யுனிலிவர் நிறுவனத்தில் வேலை செய்தபோதும் லக்சன் அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.
தனது நிர்வாகத் திறமை மூலம் லக்சன் நியூசிலாந்தை வர்த்தகத்தில் மேலும் முன்னேற்றமடையச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, அரசாங்கத்தின் கடனைக்குறைப்பது, குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு போதுமான நிதி வசதிகள் செய்துகொடுப்பது போன்ற வாக்குறுதிகளை லக்சன் தேர்தல் நேரத்தில் அறிவித்திருந்தார்.
ஒரு அணியாக செயல்பட்டு, நமது திறமைகளை வைத்து நியூசிலாந்தை முன்னேற்றுவோம் என்றார் திரு லக்சன்.
நியூசிலாந்தின் வெளியுறவு கொள்கைகளில் இனி மாற்றங்களைக் காணமுடியும் என்றும் லக்சன் கூறினார்.
இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தேர்தலில் வெற்றபெற்ற திரு லக்சனுக்கு கடிதம் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.