கோலாலம்பூர்: பள்ளியில் உள்ள கழிவறைகளின் நிலை மோசமாக இருப்பதாக மாணவி ஒருவர் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குக் கடிதம் எழுதியிருந்ததை அடுத்து, பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன் என திரு அன்வார் உறுதியளித்தார்.
“நன்றி மரியாம். பள்ளிகளில் உள்ள மாணவர்களின் நலனுக்காக இந்தப் பிரச்சினையை விரைந்து தீர்ப்பதற்கு நான் என்னால் ஆனதைச் செய்வேன்,” என்று திரு அன்வார் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை மலாய் மொழியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
பிரதமரை ‘அங்கிள் அன்வார்’ என்று 9 வயது சிறுமி ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டாலும் அவை சுத்தமாக இல்லை என்று தான் நினைப்பதாகக் கூறியிருந்தார்.
மலேசியாவின் வரவுசெலவுத் திட்டம் 2024ஐ அக்டோபர் மாதத் தொடக்கத்தில் திரு அன்வார் தாக்கல் செய்தபோது 8,354 பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கழிவறைப் பழுதுபார்ப்புத் திட்டம் 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட முடிவடைந்துவிடும் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
அது தொடர்பான புகைப்படங்களை தான் பார்த்ததாகவும் தனது பள்ளிக் கழிவறைகள் அவ்வாறு இல்லை என்றும் மரியாம் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் மேலும் அதிகமான கழிவுத் தொட்டிகளைத் தன் பள்ளிக்குக் கொண்டுவருமாறும் அச்சிறுமி கேட்டுக்கொண்டிருந்தார்.