பெத்லெஹம்: இம்மாதத்தின் தொடக்கம் வரை பெத்லெஹம் தேவாலயத்தைச் சுற்றியுள்ள சாலைகளும் முக்கிய சதுக்கமும் சுற்றுலாப் பயணிகளால் ஜொலித்துக் கொண்டிருந்தன.
அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
“போர் தொடங்கியதிலிருந்து வர்த்தகம் ஸ்தம்பித்துவிட்டது,” என்று பாலஸ்தீன நகர பயண வழிகாட்டியான எஸ்ஸா அபு தாவூத் கூறினார்.
இஸ்ரேல் முழுவதும் மற்றும் காஸா, மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளிலும் ஹோட்டல்கள் காலியாகக் காணப்படுகின்றன. ஜெருசலம், டெல் அவிவ் போன்ற நகரங்களுக்கான சுற்றுலாப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறைந்தது இரண்டு சுற்றுலா நிறுவனங்கள் அடுத்த ஆண்டு வரை பயணங்களை ஒத்திவைத்துள்ளன.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இஸ்ரேல் கடற்கரைகளுக்கு உல்லாசக் கப்பல்கள் வருவதில்லை. வெளிநாட்டு அரசாங்கங்கள், இஸ்ரேலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டின் மக்களை வெளியேற்றுவதில் தீவிரமாக இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் சுற்றுலாத் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈஸிஜெட் விமான நிறுவனம், அக்டோபர் 22ஆம் தேதி வரை டெல் அவிவ் நகரத்துக்கான அனைத்து விமானச் சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வர்ஜின் அட்லாண்டிக் ஹாலிடேஸ், அக்டோபர் 18ஆம் தேதிக்குள் பயணம் செய்வதாக இருந்தால் பயணத்தை ஒத்தி வைக்கும்படியும் அல்லது பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படியும் கூறியுள்ளது.
இம்மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென ஆகாயவழித் தாக்குதலை நடத்தியது.
இதில் குழந்தைகள் உட்பட 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் அப்பாவி பொதுமக்கள்.
இதற்குப் பதிலடியாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் தாக்கியதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரமாக்கி வருகிறது.
இண்டர்கான்டிநென்டல் ஹோட்டல், டெல் அவிவில் உள்ள தனது இரண்டு ஹோட்டல்களை தற்காலிகமாக மூடிவிட்டதாகக் கூறியது.
பெரும்பாலான ஹோட்டல்கள் காலியாகி வரும் நிலையில் இஸ்ரேலின் பிரபல ஹோட்டலான இஸ்ரோடெல்லும் தற்காலிகமாக மூடப்படும் என்று பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு சுற்றுலாத் துறை முக்கிய வருமானமாக இருந்து வருகிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்கு மட்டும் 2.8 விழுக்காடு.
“நாங்கள் சுற்றுலாத் துறையையே நம்பி வாழ்கிறோம். கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தோம்,” என்று பெத்லெஹமில் நினைவுப் பொருள்களை விற்கும் காதர் உசேன் தெரிவித்தார்.
“ஆனால் சுற்றுலாத் துறை ஒட்டுமொத்தமாக செத்துவிட்டது,” என்று அவர் கூறினார்.