ஜகார்த்தா: இந்தோனீசிய அரசமைப்பு நீதிமன்றம், அதிபர், துணை அதிபர் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச வயது 40ஆக இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மூத்த மகன் ஜிப்ரான் ராக்காபூமிங் ராக்கா போட்டியிடுவதற்கான சாத்தியம் இதன்மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதிபர் விடோடோ தமது பதவிக் காலத்தின்போதே குடும்ப அரசியலை உருவாக்க முயல்வதாகவும் பதவி விலகிய பிறகும் தமது ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ளக் கருதுவதாகவும் குறைகூறல்கள் நிலவும் வேளையில் அரசமைப்பு நீதிமன்றத்தின் முடிவு வெளியாகியுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனீசியாவில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அதிபர் தேர்தலும் பொதுத் தேர்தலும் ஒருங்கே நடைபெறவிருக்கின்றன.
அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் குறைந்தபட்ச வயதை 35ஆகக் குறைக்க முன்வைக்கப்பட்ட மனுவை இந்தோனீசியாவின் தலைமை நீதிபதியும் அதிபர் ஜோக்கோ விடோடோவின் மைத்துனருமான அன்வார் உஸ்மான் தலைமையிலான ஒன்பது நீதிபதிகளை கொண்ட குழு நிராகரித்தது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

