கோலாலம்பூர்: பாலஸ்தீனப் போராளிகளின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மேலை நாடுகள் தரும் அழுத்தத்துக்கு மலேசியா துணைபோகாது என்று அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராகிம் திங்கட்கிழமையன்று கூறினார்.
ஹமாசுக்கு மலேசியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மேலை நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து சந்திப்புக் கூட்டங்களின்போது தம்மிடம் கோரி வருவதாக திரு அன்வார் குறிப்பிட்டார்.
“நாம், கொள்கை அளவில் ஹமாசுடன் முன்பே உறவு வைத்திருந்தோம். இது தொடரும் என்று நான் கோரிய நாடுகளிடம் கூறினேன்,” என நாடாளுமன்றத்தில் திரு அன்வார் கூறினார்.
“இதனால், அழுத்தம் தரும் அவர்களின் போக்கை நாம் ஏற்க மறுக்கிறோம். தேர்தல்வழி ஹமாஸ் காஸாவில் வென்றதுடன் அவர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் காஸா மக்கள்தான்,” என்றார் அவர்.
அதிக முஸ்லிம்கள் வாழும் மலேசியா, பாலஸ்தீனத்துக்கு வெகுகாலமாகவே ஆதரவுக்குரல் தந்து வருகிறது. இஸ்ரேஸ், பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் சச்சரவுக்கு இரு தரப்புத் தீர்வைக் காணுமாறு அது கூறியும் வருகிறது.
இஸ்ரேலுடன் மலேசியா தூதரக உறவு எதுவும் வைத்திருக்கவில்லை.

