ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்க சில நாள்களே இருக்கும் நிலையில், அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தேர்தலின் நேர்மை குறித்து கவலையைத் தோற்றுவித்துள்ளது.
அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் ஏற்கெனவே வட்டாரப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்ச வயது 40 என்ற நிபந்தனை பொருந்தாது என்று திங்கட்கிழமை (அக். 16), அது கூறியது.
தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மூத்த மகன் ஜிப்ரான் ராக்காபூமிங் ராக்கா, 36, அதிபர் தேர்தலில் போட்டியிட அது வழிவகுத்துள்ளது. அவர் சுரகார்த்தா நகரின் மேயராக உள்ளார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மீண்டும் குடும்ப அரசியல் தலைதூக்கக்கூடும் என்ற அச்சத்தை அண்மைய தீர்ப்பு அதிகரித்துள்ளது.
அரசமைப்பு நீதிமன்றமும் அதிபர் மாளிகையும் இதுகுறித்து கருத்துரைக்கவில்லை.