கோலாலம்பூர்: மலேசியாவில் விவசாயத்தை, குறிப்பாக நெல் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடப்பிலுள்ள திட்டங்களை மேம்படுத்துவதற்கும் மலேசிய வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடு, புதிய விளை நிலங்களை அடையாளம் காண்பது, அதிக விளைச்சலுக்கான புதிய விவசாய முறைகளைக் கண்டறிவது உள்ளிட்ட உற்பத்தியைப் பெருக்குவதற்கான பல திட்டங்களை அமைச்சு முன்னெடுக்கும் என்று அமைச்சர் முகமது சாபு கூறினார்.
2024ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக இந்த முன்னெடுப்புகள் அமல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.
அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாய, உணவு உத்தரவாத அமைச்சுக்கு 617 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது ஒதுக்கப்பட்ட 539 கோடி ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் இது 14.4 விழுக்காடு அதிகமாகும்.
விளைச்சலை அதிகரிப்பதற்கு உயர்கல்வி நிலைய கல்வியாளர்களுடன் விவாதித்து வருவதோடு நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் நெல் ,காய்கறிகளைப் பயிரிடுவதற்கு தேவையான புதிய நிலங்களை அடையாளம் காணும் முயற்சியிலும் அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.