ஒட்டாவா: இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக கனடாவில் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
பூசலுக்கு முன்னதாகவே இந்தப் வெறுப்புணர்வு “நிலையாக அதிகரித்து” வந்ததாக அவர் சொன்னார்.
கனடாவின் ஆகப்பெரிய நகரான டொரோன்டோவில் கடந்த வியாழக்கிழமை ஆடவர் மூவரை தாங்கள் கைது செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். யூதர் கலாசார நிலையங்களிலும் யூதர் மற்றும் முஸ்லிம் வழிபாட்டுத் தளங்களிலும் காவல்துறையினர் சுற்றுக்காவலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஹமாஸ் அமைப்புக்குக் கண்டனம் தெரிவித்த பிரதமர் ட்ரூடோ, தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலின் உரிமையை ஆதரித்தார்.
“பாலஸ்தீன மக்களையோ அவர்களின் உண்மையான விருப்பங்களையோ ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிக்கவில்லை. முஸ்லிம் அல்லது அரபு சமூகங்களுக்காக அது குரல்கொடுக்கவும் இல்லை. பாலஸ்தீனர்கள் அல்லது அவர்களுடைய பிள்ளைகளுக்கு மேம்பட்ட எதிர்காலத்தை அந்த அமைப்பு பிரதிநிதிக்கவில்லை,” என்றார் பிரதமர் ட்ரூடோ.