ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி தெரிவித்தார்.
ஹமாஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிரான போரில் இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள என்னென்ன தேவைப்படுமோ அனைத்தையும் அமெரிக்கா வழங்கும் என்று புதன்கிழமை இஸ்ரேலில் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் புதன்கிழமை இஸ்ரேல் சென்றார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை அவர் சந்தித்தார்.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் திடீர்த் தாக்குதல் நடத்தி பலரையும் கொன்றது. அப்படிச் செய்ததன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைவிட மோசமான அமைப்பாக ஹமாஸ் ஆகிவிட்டது என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
காஸா சிட்டியில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் கோபமடைவதாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார்.
அந்த மருத்துவமனை தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்துவிட்டதாக ஹமாஸ் கூறியது. அதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்றும் அது தெரிவித்தது.
ஆனால், அந்தத் தாக்குதலை தான் நடத்தவில்லை என்றும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்நிலையில், கருத்து கூறிய அமெரிக்க அதிபர், அந்தத் தாக்குதலுக்கு வேறொரு கும்பல் காரணமாக இருக்கும்போல் தெரிகிறது என்றார். பாலஸ்தீன தீவிரவாதிகளைக் குறிப்பிட்டு அதிபர் அவ்வாறு கூறினார்.
ஹமாஸ் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 31 அமெரிக்கர்களும் அடங்குவர் என்று அதிபர் பைடன் குறிப்பிட்டார்.
ஹமாஸ் தாக்குதலை அடுத்து காஸாவில் இடைவிடாத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக குறைந்தபட்சம் 3,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹமாஸுக்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவை உறுதிபடத் தெரிவிக்கும் நோக்கத்துடன் அதிபர் பைடன் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டார்.
மத்திய கிழக்கில் போர் நடக்கும் ஒரு நேரத்தில் அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு இப்போதுதான் முதல்முறையாக வருகை அளித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் இஸ்ரேல் நடத்தி வரும் போர் விரிவடைந்து மத்திய கிழக்கு பாதிக்கப்படுவதைத் தடுப்பதும் அமெரிக்க அதிபர் மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்தின் நோக்கமாக இருந்தது.
காஸாவில் குடிமக்கள் படும் துயரங்களைப் போக்குவதற்கு இஸ்ரேல் தெள்ளத்தெளிவாக உறுதி கூற வேண்டும். இதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற நெருக்குதல் அமெரிக்க அதிபருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
காஸா பகுதியில் 2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் மிக நெருக்கமாக வசிக்கிறார்கள். அந்தப் பகுதியை இஸ்ரேல் முழுமையாக முற்றுகையிட்டுவிட்டது.
மக்களுக்கு உணவு, எரிபொருள், தண்ணீர், மருந்து எதுவும் கிடைக்கவில்லை.
இதனிடையே, இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு அதிபர் பைடன் புறப்பட்டபோது வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் பேசினார்.
இஸ்ரேலிய தலைவர்களிடம் அதிபர் பைடன் கடுமையான கேள்விகளை முன்வைப்பார் என்று தெரிவித்த அந்தப் பேச்சாளர், விரிவாக வேறு எதையும் குறிப்பிடவில்லை.