இஸ்லாமாபாத்: காஸாவில் அக்டோபர் 7க்கு பிறகு இஸ்ரேல் நடத்திவரும் போர், பாதிப்படைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீதான ஆதரவைப் பெருக்கி வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டங்களைப் பல நகரங்களில் நடத்திவருகின்றன.
ஹமாஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ள பாகிஸ்தான் அரசியல் கட்சிகள், ஹமாசின் தலைவர்கள் சிலரைப் போராட்ட மேடைகளில் பேசவைத்துள்ளனர். பாகிஸ்தானிய அரசாங்கம் இஸ்ரேல் மீதான கண்டனத்தை மேலும் கடுமையாக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். அதனைப் பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்துவருகின்றது.
பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பில் தற்காலிக வெளியுறவு அமைச்சர் ஜலில் அபாஸ் ஜிலானி, இஸ்ரேல்தான் ஆக்கிரமிப்பாளர் என்றும் பாலஸ்தீனப் பிரச்சினையில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய நாட்டு பாதுகாப்பு அமைப்பு (யுஎன்எஸ்சி) மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஒஐசி)ஆகிவற்றின் பரிந்துரையின்படி, பாலஸ்தீனத்துக்கு தன்னாட்சி அங்கீகாரம் கிடைக்கும்வரை அதே நிலையை தமது நாடு கடைப்பிடிக்கும் என்று அறிவித்தார்.
உணவு, தண்ணீர், எண்ணெய், மின்சாரம் போன்றவற்றை காஸா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுப்பிவைக்கவுள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறினார். இஸ்லாமிய நாடுகளில் அணுஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடான பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரித்து எவ்வித அரசதந்திர உறவையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

