சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சனிக்கிழமை (அக். 21) அவர் தமது பயணத்தைத் தொடங்கினார்.
வர்த்தக ஒத்துழைப்பு குறித்தும் மத்திய கிழக்கில் நெருக்கடி நிலவும் வேளையில் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் அவர் அந்நாட்டுத் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் என்று கூறப்பட்டது.
தமது பயணத்தின் முதற்கட்டமாக சவூதி அரேபியா செல்லும் அதிபர் யூன், சவூதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை ஞாயிற்றுக்கிழமை சந்திப்பார்.
அக்டோபர் 24, 25ஆம் தேதிகளில் கத்தாருக்குச் செல்லும் தென்கொரிய அதிபர் அங்கு நடைபெறும் உச்சநிலை மாநாட்டிலும் வர்த்தகக் கருத்தரங்கிலும் கலந்துகொள்வார்.
ஓராண்டுக்குமுன் சவூதி இளவரசர் தென்கொரியா சென்றிருந்தபோது எரிசக்தி, தற்காப்பு, உள்கட்டமைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்துக் கலந்துரையாடப்பட்டது. கொரிய நிறுவனங்களுடன் $30 பில்லியன் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.