நியூயார்க்: கள்ளச் சந்தையில் ‘எச்ஐவி’ மருந்துகளை வாங்கவும் விற்கவும் 20 மில்லியன் அமெரிக்க டாலர் (S$27 மில்லியன்) மதிப்பிலான சதித்திட்டம் தீட்டியதாக பத்து பேர் மீது அமெரிக்காவின் கூட்டாட்சி வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பணக்காரர் ஆவதற்கு குறுக்குவழியை நாடிய இவர்கள், சில குறைந்த வருமான நோயாளிகளிடமிருந்து மருந்தை வாங்கியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலர், ஈட்டிய பணத்தைக் கொண்டு சொகுசு கார்கள், நியூயார்க் நகரில் நீர்முனை நிலச் சொத்துகள், உயர் ரக ஆடைகள், நகைகள், தங்கம் ஆகியவற்றை வாங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.
சதித்திட்டத்தில் அங்கம் வகித்த குறிப்பிட்ட சில உள்ளூர் மருந்துக் கடைகளை நாடும்படி நோயாளிகளுக்குக் கூறப்பட்டதுடன் அவர்களுக்கு லஞ்சமும் தரப்பட்டது. ‘மெடிகேர்’, ‘மெடிக்எய்ட்’ ஆகியவற்றுடன் தனியார் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து 2017ஆம் ஆண்டு முதல் மில்லியன் கணக்கான டாலர் கையாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சமுதாயத்தில் எளிதில் பாதிப்படையும் பிரிவினரைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறிவைத்ததாக நியூயார்க் தென் மாவட்ட அமெரிக்க வழக்கறிஞர் திரு டேமியன் வில்லியம்ஸ் குறிப்பிட்டார்.