கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின், சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காகத் தமது கடப்பிதழை விடுவிக்கும்படி கோரியுள்ளார்.
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவின் ‘மாயோ கிளினிக்’கில் தாம் சிகிச்சை பெற்றபோது, அதேவகையான சிகிச்சையும் மருத்துவ உபகரணங்களும் சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருப்பதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்ததாகத் திரு முகைதீன் சொன்னார்.
இந்த ஆண்டு இறுதியில் லண்டனுக்குச் செல்ல விரும்புவதாகவும் தமது கோரிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுக்கொருமுறை ஒரு மாதம் விடுமுறைப் பயணம் மேற்கொள்வது தமது குடும்பப் பாரம்பரியம் என்றார் அவர்.
இந்த ஆண்டு தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் மனஉளைச்சல் அதிகமாக இருப்பதால் இந்தப் பயணம் தமக்கு மிகவும் முக்கியம் என்று கூறிய திரு முகைதீன், தமது குடும்பத்தினருடன் நேரம் செலவிட அது உதவுமென்றார்.
மலேசிய ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டுள்ளன.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவரான திரு முகைதீன்மீது பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இரண்டு மில்லியன் ரிங்கிட் ($576,000) பிணைத் தொகையே போதுமானது என்றும் கடப்பிதழை ஒப்படைப்பது கூடுதல் உத்தரவாதம் என்றும் தமது வழக்கறிஞர் கூறியதாகத் திரு முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.