சோல்: தென்கொரியாவில் 55-79 வயதுப் பிரிவினரில் 60 விழுக்காட்டினர் (9.3 மில்லியனுக்கும் அதிகமானோர்) தற்போது வேலை செய்வதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
2005ல் முதன்முதலாக இதுகுறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டதில் இருந்து, இந்த வயதுப் பிரிவில் இத்தனைப் பேர் இதுவரை வேலை செய்ததில்லை.
2013க்குப் பிறகு, முதிய வயதுப் பிரிவினர் ஊழியரணியில் இடம்பெறும் விகிதம் 60 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக ‘ஸ்டேட்டிஸ்டிக்ஸ் கொரியா’ நடத்திய அந்த ஆய்வில் தெரிய வருகிறது.
இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு முதிய வயது ஊழியர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரோக்கியமான உடல்நிலை, நீண்ட ஆயுளுடன் வாழ்வது, விலைவாசி உயர்வு குறித்த கவலை போன்ற அம்சங்களால் இந்த வயதுப் பிரிவினர் வேலைக்குச் செல்வதாக ‘கொரியா ஜூங்ஆங் டெய்லி’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முதிய வயது ஊழியர்கள் பெரும்பாலானோர், அதிக அனுபவமோ பயிற்சியோ தேவைப்படாத வேலைகளைச் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதிய வயதினரிடையே அதிகமான மாதர்கள் வேலை செய்ய விரும்புவதாக ஆய்வில் தெரியவந்தது. 2011ல் இந்த வயதுப் பிரிவினரில் 47.8 விழுக்காட்டினர் வேலை செய்ய விரும்பினர். 2021ல் இந்த விகிதம் 60.3 விழுக்காடாகக் கூடியது.
ஒப்புநோக்க, 2011ல் 74 விழுக்காட்டு ஆடவர்களும் 2021ல் 77.3 விழுக்காட்டினரும் வேலை செய்ய விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.