வெல்லிங்டன்: கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நியூசிலாந்தின் ஆக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பிலான மரண விசாரணை செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியுள்ளது.
கிரைஸ்ட்சர்ச் நகரில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதியன்று இரண்டு பள்ளிவாசல்களில் பிரென்டன் டரான்ட் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். வெள்ளையின மேலாதிக்கவாதியான 32 வயது டரான்ட் அந்தத் தாக்குதலில் 51 பேரைச் சுட்டுக் கொன்றார். மேலும் பலர் காயமுற்றனர்.
அவர் தாக்குதலை நடத்துவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு இனவாதக் கருத்துகளைக் கொண்ட பற்றுறுதியை வெளியிட்டார். பின்னர் தாக்குதலை ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார்.
டரான்ட்மீது சுமத்தப்பட்டிருந்த 51 கொலைக் குற்றச்சாட்டுகள், கொலை முயற்சி தொடர்பிலான 40 குற்றச்சாட்டுகள், பயங்கரவாத நடவடிக்கை மேற்கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு ஆகியவை நிரூபிக்கப்பட்டன. தற்போது டரான்ட் பரோல் இன்றி ஆயுள் தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.