அடுத்த ஆண்டு ஐந்து புதிய தாய்லாந்து விமானச் சேவைகள்

2 mins read
304fc8f8-6e06-4f2b-b684-0b910e0b35f7
அடுத்த ஆண்டு சேவையைத் தொடங்க திட்டமிட்டு இருக்கும் தாய்லாந்தின் ஐந்து புதிய விமான நிறுவனங்களில் ‘ரியலி கூல் ஏர்லைன்ஸ்’ என்ற நிறுவனமும் ஒன்று. - படம்: ரியலி கூல் ஏர்லைன்ஸ் 

பேங்காக்: தாய்லாந்து ஐந்து புதிய விமான நிறுவனங்களைச் சேவையில் அமர்த்தத் தொடங்குகிறது.

அந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம் 3.85 பில்லியன் பாட் (S$145 மில்லியன்) முதலீட்டுடன் வர்த்தகச் சேவைகளை 2024ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்தின் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி கண்டு வருகிறது.

அந்தத் துறையின் மதிப்பு 2024ல் 320 பில்லியன் பாட் அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தச் சூழலில் புதிய விமான நிறுவனங்கள் சந்தையில் ஈடுபட இருக்கின்றன.

ரியலி கூல் ஏர்லைன்ஸ், பி80 ஏர், பட்டாயா ஏர்வேஸ், சியாம் சீபிளேன், லேண்டார்க் ஏர்லைன்ஸ் ஆகியவை விமானச் சேவை உரிமம் பெற்று இருக்கும் ஐந்து புதிய நிறுவனங்கள்.

தாய்லாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த விவரங்களைத் தெரிவித்து உள்ளது.

அந்த நிறுவனங்களுக்கான விமானச் சேவை சான்றிதழை இந்த ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். அதற்குப் பிறகு நிறுவனங்கள் தாய்லாந்தில் வர்த்தக ரீதியில் சேவைகளைத் தொடங்கலாம்.

இதனிடையே, இது பற்றி கருத்து தெரிவித்த ரியல் கூல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பட்டீ சராசின், 2024 ஜனவரியில் அந்த அங்கீகாரச் சான்றிதழ் கிடைக்கும் என்றும் அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் இருந்து சேவையைத் தொடங்கிவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

தொடக்கமாக முதல் இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் நான்கு ஏர்பஸ் ஏ330-300 ரக விமானங்களைச் சேவையில் ஈடுபடுத்தும்.

ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், ஷங்காய் போன்ற ஆசிய வழித்தடங்களில் நிறுவனம் ஒருமித்த கவனத்தைச் செலுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

முதலில் 130 ஊழியர்களுடன் நிறுவனம் 2024 மார்ச் முதல் 2024 மே வரை வாடகை விமானங்களை சேவையில் ஈடுபடுத்தி சந்தையை நோட்டமிடும். பிறகு கால அட்டவணைப்படி சேவைகள் தொடங்கப்படும்.

ஐரோப்பிய சந்தைகளுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பயணிகளின் பயணப் பெட்டிகளை அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் உலகின் முதல் விமான நிறுவனமாக ரியலி கூல் திகழும் என்றார் அவர்.

இதர நான்கு நிறுவனங்களும் அடுத்த ஆண்டு சேவையைத் தொடங்கப்போவதாக தெரிவித்து உள்ளன.

குறிப்புச் சொற்கள்