கொழும்பு: இந்தியா அதன் ராணுவப் படைகளை மீட்டுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாக ‘புளூம்பெர்க் நியூஸ்’ வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட பேட்டியில் மாலத்தீவின் அதிபர் முகம்மது முய்சு தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம் இப்ராகிம் சோலிஹையை அதிபர் தேர்தலில் வென்ற முய்சு, இந்தியப் படை பலத்தை அகற்றுவதைத் தமது பிரசார இயக்கத்தின் முக்கிய உறுதிமொழியாகக் கொண்டிருந்தார்.
புதுடெல்லி வழங்கிய ரேடார் நிலையங்களையும் கண்காணிப்பு விமானங்களையும் கிட்டத்தட்ட 70 இந்திய ராணுவ வீரர்கள் பராமரித்து வருவதுடன் மாலத்தீவின் பிரதான பொருளியல் வட்டாரத்தை இந்தியப் போர்க்கப்பல்கள் காவல் காக்க உதவிவருகின்றன.
இந்நிலையில், இந்திய அரசாங்கத்துடன் தாம் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை ‘இப்போதே வெற்றிகரமாக உள்ளது’ என்று முய்சு தம் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
“இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வகையில் எங்களுக்கு நல்லுறவு வேண்டும்,” என்று முய்சு புளூம்பெர்க் நிறுவனத்திடம் கூறியிருந்தார். இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக வேற்று நாட்டுப் படைகள் நிறுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு ராணுவ அதிகாரிகளை இந்தியா மீட்டுக்கொள்ள வேண்டும் எனத் தாம் கேட்டுக்கொள்வதன் வழி சீனாவோ வேறு எந்த நாடோ தங்களின் ராணுவப் படைகளைக் கொண்டுவரலாம் என்று ஆகாது என்றும் முய்சு வலியுறுத்தினார்.