ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான ஜோகூர் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு நெரிசல் என்பது பயணிகளுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜோகூரின் சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (சிஐகியு) வளாகத்தில் தானியக்க வழித்தடங்களையும் கழிவறை வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்போதுதான் ஜோகூர் கடற்பாலத்தை சுமூகமாகவும் வசதியாகவும் கடந்து செல்ல முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் அடிக்கடி பேருந்து வழியாக பயணம் செய்யும் திரு ஹாங் ஹுய் செக், சிஐகியு வளாகத்தில் தானியக்க வழித்தடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நெரிசல் குறையும் என்கிறார்.
பேருந்து வழியாக பயணம் செய்பவர்கள் குடிநுழைவு சோதனையைக் கடந்துசெல்ல கால்வலிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
தற்போது சிஐகியு வளாகத்தில் தானியக்க சோதனை அல்லது முகப்பு சோதனை ஆகிய இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் இந்த இரண்டு சோதனைகளிலும் நெடுந்தூரம் மக்கள் வரிசையில் நிற்பது வழக்கமாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.
திரு ஹாங், 41, வேன் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். அண்மைய மலேசியாவின் 2024 வரவு செலவு திட்ட ஒதுக்கீடு, அதிக தானியக்க வழித்தடங்களை அமைக்கப் பயன்படுத்தப்படும் என அவர் எதிர்பார்க்கிறார்.
இது, குடிநுழைவுத் துறையின் ஊழியர் பற்றாக்குறை பிரச்சினைக்கும் தீர்வாக அமையும் என்கிறார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“ஒட்டுமொத்த நடைமுறைகளும் எளிமையாகிவிடும். தானியக்க வழித்தடங்களில் பயணிகளுக்கு வழிகாட்ட குறைந்த எண்ணிக்கை ஊழியர்கள் போதும்,” என்று திரு ஹாங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இருப்பதுபோன்று எல்லைச் சோதனைச் சாவடி முழுமையாக தானியக்கமாக்கப்படும் என்பது திரு ஹாங்கின் கனவு.
சிங்கப்பூரில் பயணிகள் 15 நிமிடங்களில் குடிநுழைவு சோதனைகளை முடிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.