பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கனமழையால் கடைத்தொகுதி ஒன்றின் கூரை விழுந்ததில் மூவர் காயமடைந்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் இருக்கும் மெகா ரைஸ் மால் எனும் கடைத்தொகுதியில் சனிக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவம் பதிவான காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.
ஒரு மாது அலறிக்கொண்டிருந்தது காணொளியில் கேட்டது. கூரை விழும்போது பலர் பயந்து ஓடியதும் காணொளியில் பதிவானது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக மேகா ரைஸ் கடைத்தொகுதியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை சீராக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
கடைத்தொகுதியின் பாதிக்கப்பட்ட பகுதி மட்டும் மூடப்பட்டிருக்கும் என்றும் இதர பகுதிகள் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் என்றும் ஃபேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டது. கருத்துப் பதிவுக்கான பகுதியின் ஒருவரின் கேள்விக்கு கடைத்தொகுதி அவ்வாறு பதிலளித்தது.

