தனது 31வது வயதில் இறந்துவிட்டதாக இம்மாதத் தொடக்கத்தில் போபி என்ற நாயைப் பற்றி உலகமே அறிந்துகொண்டது. இதுவரை பதிவான ஆக வயதான நாய் என்று போபி குறிப்பிடப்பட்டதை அடுத்து, நாயின் வயது குறித்து கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு விசாரணை மேற்கொண்டுள்ளது.
போர்ச்சுகலைச் சேர்ந்த அந்த நாய் உண்மையாகவே 31 ஆண்டுகள் 165 நாள்கள் உயிர்வாழ்ந்ததா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
200 மனித ஆண்டுகளுக்கு நிகராக வாழும் சாத்தியம் நாய்களுக்கு உண்டா என்பது தொடர்பில் கால்நடை மருத்துவர்கள் கேள்வி எழுப்பியதற்கு இடையே இந்த விசாரணை தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
போபி 1992ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டது என்றாலும் அதன் உரிமையாளரின் சுய சான்றளிப்பின் அடிப்படையில்தான் அப்பதிவு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
போபி அதன் வகை அடிப்படையில் 12 முதல் 14 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியது என்றிருக்க அது 31 வயது வரை உயிர்வாழ்ந்ததாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.