பெட்டாலிங் ஜெயா: கொவிட்-19க்கு எதிரான மொத்தம் 8.5 மில்லியன் தடுப்பூசி அளவைகள் இவ்வாண்டு ஜூன் 1ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டதாக மலேசியாவின் அரசாங்கக் கணக்குக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது. காலாவதியான மொத்த மருந்தின் மதிப்பு 505 மில்லியன் ரிங்கிட் ($145 மி.) என்று அறியப்படுகிறது.
தேவைக்கு ஏற்ப மதிப்பிடப்பட்டு இந்த மருந்து அளவைகளைச் சுகாதார அமைச்சு தருவித்ததாக மலேசியாவின் அதிகாரத்துவ நாடாளுமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், தடுப்பூசிக்கான தேவை குறைந்ததாலும் மற்ற நாடுகள் மலேசியாவுக்குத் தடுப்பூசி வழங்கியதாலும் அதிகப்படியான கொள்முதல் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, 2020ஆம் ஆண்டில் கொவிட்-19 கொள்ளைநோய் அதன் உச்சத்தில் இருந்தபோது ஒப்பந்தம் எதுவுமின்றி 100க்கும் மேற்பட்ட ‘வென்டிலேட்டர்’ கருவிகளை மலேசியாவின் சுகாதார அமைச்சு வாட்ஸ்அப் வழியாக வாங்கியது என்றும் அந்தக் கருவிகள் குறைபாடு உடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.