பெய்ஜிங்: உக்ரேன் மோதலை ஆசிய-பசிபிக் வட்டாரத்திற்கு நீட்டிக்கும் விதத்தில் மேற்கத்திய நாடுகள் நடந்துகொள்வதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு குறைகூறி உள்ளதாக ரஷ்ய அரசாங்க ஊடகம் தெரிவித்து உள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெறும் சீனாவின் ஆகப்பெரிய ராணுவ அரசதந்திரக் கருத்தரங்கில் அவர் இதனைத் தெரிவித்ததாகவும் ரஷ்யாவின் டிஏஎஸ்எஸ் செய்தி நிறுவனம் கூறியது.
பேச்சுவார்த்தையில் ஆர்வம் இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகள் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் படைகளை நிறுத்தி மூடி மறைப்பதாகவும் திரு ஷோய்கு கூறினார்.
ரஷ்யாவையும் சீனாவையும் தள்ளிவைத்துவிட்டு ஏவுகணை பாய்ச்சுவது தொடர்பான தகவல்களை தோக்கியோவிடமும் சோலிடமும் அமெரிக்கா பகிர்ந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, மனிதாபிமான உதவி என்ற பெயரில் தலையீடுகளை வாஷிங்டன் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.