கராச்சி: உரிய ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் நவம்பர் 1ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் முஹமட் ரஹிம், ஆப்கான் எல்லைக்குச் செல்வதற்காக செவ்வாய்க் கிழமை கராச்சியில் பேருந்தில் ஏறி புறப்பட்டார்.
“நாங்கள் இங்கு முழுமையாக வாழ்ந்துள்ளோம். எங்களை திருப்பி அனுப்பக் கூடாது,” என்று 35 வயது முஹமட் ரஹிம் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பிறந்தாலும் முஹமட் ரஹிம் ஆப்கானிஸ்தான் நாட்டவர். பாகிஸ்தானில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து பாகிஸ்தானில் பிறந்த தனது குழந்தைகளை அவர் வளர்த்து வந்தார்.
ஆனால் அவரிடம் பாகிஸ்தானியர் என்பதற்கான ஆவணங்கள் இல்லை.
செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22 வரை பாகிஸ்தானிலிருந்து சுமார் 60,000 ஆப்கான் நாட்டவர்கள் நாடு திரும்பியிருப்பதாக ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம் கூறியுள்ளது.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியேறாத ஆவணம் இல்லாத குடியேறிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவோம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. இதற்கு நவம்பர் 1ஆம் தேதி காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

