கியவ்: உக்ரேனிய தாக்குதல்களால் கருங்கடலில் உள்ள ரஷ்ய கடற்படையின் போர்க்கால நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனிய தாக்குதல்களால் உலக நாடுகள் உடனடி வெற்றியை எதிர்பார்த்திருக்கும் நிலையில் அதிபர் ஸெலன்ஸ்கி தமது துருப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமையன்று மேற்கண்டவாறு கூறினார்.
உக்ரேன் பல மாதங்களாக தனது பதில் தாக்குதலை நடத்திவரும் வேளையில், உக்ரேனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் பெரிய மாற்றம் ஏற்படாததால் உக்ரேன் மீது சில நட்பு நாடுகள் குறைகூற ஆரம்பித்திருப்பதுடன் பொறுமை இழந்தும் வருவது தெரிவதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
“வேகமாக கிடைக்கும் வெற்றிக்கு பழக்கப்பட்டிருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம். உக்ரேன் மீது முழு அளிவிலான தாக்குதல் தொடங்கியபோது உலகில் பலர் உக்ரேன் தாக்குப்பிடித்து பிழைக்கும் என்று நினைக்கவில்லை.
“பின்வாங்காமல் போரிட்டு, சோர்வை விரட்டியடித்து, உக்ரேன் மீது கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து இன்றும் நம்பிக்கை வைத்து அயராமல் போரிடும் அனைவருக்கும் வெற்றி உரிதே,” என்று திரு ஸெலன்ஸ்கி தமது அன்றாட இரவுநேர காணொளி நிகழ்ச்சி வாயிலாக உரை நிகழ்த்தினார்.”
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. போர் தொடங்கி 20 மாதங்கள் நிறைவுற்ற நிலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முடிவு தெரியவில்லை. ரஷ்யா பல முனைகளில் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதில் ரஷ்யப் படைகள் பலத்த சேதத்தையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருங்கடலில் ரஷ்யாவின் ராணுவ பலத்தை தமது நாட்டுத் துருப்புகள் வெகுவாகக் குறைத்துள்ளதாக திரு ஸெலன்ஸ்கி தெரிவித்தார். இத்துடன், நட்பு நாடுகளிடமிருந்து கூடுதல் உதவி கிடைத்தால் ரஷ்யாவுக்கு எதிராக இறுதி வெற்றி கிடைக்கும் என்று அவர் முழங்கினார்.
கருங்கடல் பகுதி முக்கிய போர்க்களமாக மாறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
ரஷ்யாவுக்கு எதிராக ஆகாய, கடல்வழி டிரோன் தாக்குதல்களை உக்ரேன் அதிகரித்துவருவதால் கருங்கடல் துறைமுகமான ஸ்வெஸ்டபோலில் உள்ள கடற்படைத் தளங்கள், கப்பற் பட்டறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள மற்ற ராணுவத் தளங்கள் மீதும் உக்ரேன் தாக்குதலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, மத்திய உக்ரேன் பகுதியில் உள்ள ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ரஷ்யா வானூர்தி தாக்குதல் மேற்கொண்டதால் அந்நிலையம் தீப்பற்றி எரிவதாக கூறப்பட்டுகிறது. அத்துடன் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் தாக்குதலால் ஏற்பட்ட சிதறல்கள் அருகிலுள்ள ரயில்வே தண்டவாளங்களையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.