ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய தலைநகராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நுசந்தாராவில் விமான நிலையம், மருத்துவமனை, ஹோட்டல், விரைவுச்சாலை என பல்வேறு கட்டுமான திட்டங்களை அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
மிகக் கடுமையான வாகன நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ள ஜகார்த்தாவிலிருந்து அரசாங்கத்தை மற்றோர் இடத்துக்கு இடம் மாற்றும் திரு விடோடோவின் திட்டத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் இத்திட்டத்துக்கு US$32 பில்லியன் (S$43.83 பில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்க்க அவரது அரசாங்கம் சிரமப்படுகிறது. அதற்காக அவரது அரசாங்கம், 2024 வரவு செலவுத் திட்டத்திலிருந்து 40.6 ட்ரில்லியன் ரூப்பியாவை ($3.5 பில்லியன்) ஒதுக்கியுள்ளது.
இந்த வாரத்தில் நுசந்தாரா வருகை மேற்கொள்ளும் ஜோக்கோவி என்று சுருக்கமாக அழைக்கப்படும் திரு விடோடோ, 12.5 ட்ரில்லியன் ரூப்பியா மதிப்பிலான 10 திட்டங்களைத் தொடங்கி வைப்பார். நுசந்தாரா நகரம், போர்னியோ காடுகள் அழிக்கப்பட்ட நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது.
347 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவுள்ள விமான நிலையம் 2024 டிசம்பரில் முழுமையாகச் செயல்படத் தொடங்கும். அதை உருவாக்கும் செலவு 4.2 ட்ரில்லியன் ரூப்பியா.
“புதன்கிழமை நடைபெற்ற நில அகழ்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு ஜோக்கோவி, “இந்தப் புதிய விமான நிலையம் போட்டித்தன்மையை அதிகரிப்பதுடன் பொருளியல் வளர்ச்சியையும் அதிகரிக்கும். அத்துடன் புதிய தலைநகரின் மேம்பாட்டையும் துரிதப்படுத்தும்,” என்றார்.
அரசாங்கம், 2024 பிற்பகுதியில் அனைத்துலக தரத்திலான மருத்துவமனையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதை ‘மாயாபடா’ எனும் இந்தோனீசிய மருத்துவமனைக் குழுமம் கட்டும்.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவி, பாலிக்பாப்பானில் உள்ள நிலக்கரி மையத்துக்கு இட்டுச் செல்லும் 57 கிலோ மீட்டர் சாலையின் கட்டுமானத்தைப் புதன்கிழமை பார்வையிட்டார். அது அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் தயாராகிவிடும்.
“இந்தச் சாலை கட்டிமுடிக்கப்பட்டவுடன், இப்போது இரண்டு மணிநேரம் எடுக்கும் பயணம் 50 நிமிடங்களுக்குக் குறைக்கப்படும்,” என்று கூறினார் திரு ஜோக்கோவி.
இந்தோனீசிய சொத்து மேம்பாட்டாளரான ‘பக்குவோன் ஜத்தி’ எனும் நிறுவனம் ஒரு ஹோட்டல், ஒரு குடியிருப்புக் கட்டடம், ஒரு கடைத்தொகுதி ஆகியவற்றைக் கட்டும்.
டிசம்பரில் மேலும் ஒன்பது திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் அதிபர் ஜோக்கோவி தெரிவித்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.