சியேட்டல்: அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின்மீது மூன்று பயணிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பணியில் இல்லாத ஒரு விமானி, காக்பிட் அறையில் உள்ள ஜம்ப் சீட் எனும் கூடுதல் இருக்கையில் உட்கார்ந்திருந்தபோது விமானத்தின் எஞ்சின் இயந்திரங்களைச் செயலிழக்க வைக்க முயன்றதாக நம்பப்படுகிறது. அதற்காக வியாழக்கிழமையன்று அந்த மூன்று பயணிகள் அலாஸ்கா ஏர்லைன்ஸ்மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
அந்நிறுவனம், விமானப் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியது என்பது அந்தப் பயணிகளின் வாதம்.
இச்சம்பவம் அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 2059ல் நிகழ்ந்தது. அந்த விமானம் வாஷிங்டனின் எவரெட் பகுதியிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் இருந்த எல்லா பயணிகளின் சார்பாகவும் தாங்கள் வழக்கு தொடர்ந்ததாக அந்த மூன்று பயணிகளும் கூறினர். வாஷிங்டன் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது.