லாட்டரி, காற்பந்து போன்ற விளையாட்டுகள் தொடர்பான பந்தயங்களில் கடந்த ஆண்டில் மக்கள் $10.3 பில்லியன் செலவு செய்தனர்.
இவ்வாண்டு மார்ச் மாதம் முடிவடைந்த நிதி ஆண்டில் செலவிடப்பட்ட தொகை, கடந்த ஆண்டு செலவிடப்பட்ட $9.2 பில்லியனைவிட 12 விழுக்காடு அதிகம்.
கத்தாரில் நடந்த 2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி இந்த அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம் என்று பந்தயப் பிடிப்புக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டு அறிக்கை குறிப்பிட்டது.
பத்து ஆண்டுகளில் பந்தயப் பிடிப்பில் மக்கள் செலவிட்ட தொகை கடந்த ஆண்டே ஆக அதிகம். எனினும் 4டி, டோட்டோ, காற்பந்து அல்லது மோட்டார் பந்தயங்கள் போன்றவற்றில் மக்கள் செலவிட்ட தொகை குறித்த விவரங்களைக் கழகம் வெளியிடவில்லை.
இதற்கிடையே, கடந்த நிதியாண்டில் சூதாட்டக் கூட நுழைவுத் தீர்வையாக $147 மில்லியன் வசூலிக்கப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டு வசூலிக்கப்பட்ட $125 மில்லியனை விட 17% அதிகம். சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கான அன்றாட சூதாட்டக் கூட தீர்வை ஒருவருக்கு $150.