கோலாலம்பூர்: இஸ்ரேலுடன் தொடர்பு வைத்திருப்பதாக அல்லது அந்நாட்டை ஆதரிக்க உறுதியளித்துள்ளதாகக் கூறப்படும் நிறுவனங்களின் பட்டியல் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் அந்நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு மலேசியர்களிடம் வலியுறுத்தப்படுகிறது.
இந்த நிறுவனங்களில் அமெரிக்க உணவு நிறுவனங்களும் அடங்கும். அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதால், காஸாவில் போர் நடைபெறும்போதெல்லாம் இத்தகைய நிறுவனங்களே புறக்கணிக்கப்படுகின்றன.
ஆனால், இந்தப் புறக்கணிப்பால் இம்முறை தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மலேசியாவில் செயல்படும் மெக்டோனல்ட்ஸ் விரைவு உணவக ஊழியர்கள் கூறுகின்றனர்.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மலேசியர்கள் பெரிய அளவிலான பேரணிகளை நடத்தியுள்ளனர். கடந்த வாரத்தை ‘பாலஸ்தீன ஒருமைப்பாட்டு வாரமாக’ மலேசிய அரசாங்கம் அறிவித்தது.
போராட்டங்கள் நடத்துவதற்கும் மேலாக இன்னும் அதிகமானவற்றை செய்ய வேண்டும் என்று திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட மலேசியர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டு வருகின்றனர்.