ஸ்காட்லாந்து மலைப் பாறை ஒன்றில் ஈராண்டுகளாக தன்னந்தனியாக சுற்றிக்கொண்டிருந்த செம்மறியாடு ஒன்று வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
ஃபியோனா என்று தற்போது அதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று ஐவர் அடங்கிய குழுவினர் கனமான ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆட்டை மீட்டனர் என்று அந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கேமி வில்சன் தெரிவித்தார்.
மலைப் பாறையின் உச்சியில் இருவரும் மலைப் பறையின் அடிவாரத்தில் மூவரும் கனமான ஆயுதங்களைப் பயன்படுத்தி 250 மீட்டர் உயரத்திலிருந்து ஆட்டை கீழே கொண்டு வந்ததாக பிபிசி தகவல் தெரிவித்தது.
“ஒரு குகைக்குள் ஆட்டைக் கண்டுபிடித்தோம். மிகத் தாழ்வான அந்தப் பகுதியிலிருந்து ஆட்டை மேலே கொண்டு வந்தோம்,” என்று வில்சன் கூறினார்.
ஃபியோனா நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் படகுப் பயணத்தின்போது ஜிலியன் டர்னர் அவ்வட்டாரத்தில் ஆட்டை கண்டுபிடித்தார். அதே ஆடு தற்போது பெருத்து இருப்பதைக் கண்டு அவர் வியப்படைந்துள்ளார்.
குறைந்தது இரண்டு ஆண்டுகள் அது தனியாக இருந்திருக்கும் என்று ஜிலியன் கூறினார்.
“மலையில் ஆடு தனியாக சுற்றிக் கொண்டிருப்பது பற்றி ஏற்கெனவே தெரியும். ஆனால் அதை பாதுகாப்பாக மீட்பதற்கான வழி தெரியவில்லை,” என்று வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ஸ்காட்டிஷ் சமூகம் தெரிவித்தது.
“ஃபியோனா ஓய்வெடுக்கவும் முழுமையாக மீண்டு வரவும் ஸ்காட்லாந்தில் உள்ள சிறப்பு இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும்,” என்று அந்த அமைப்பின் அறிக்கை தெரிவித்தது.