கியவ்: ரஷ்யா-உக்ரேன் போர் நிலைகுத்தி நின்றுவிட்டதாக உக்ரேனின் உயர் ராணுவத் தளபதி வெளிப்படையாகக் கூறியதை அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
ராணுவத் தளபதியின் கருத்துகள் ரஷ்யப் படையெடுப்புக்கு சாதகமாக அமையும் என்று சனிக்கிழமை அது கூறியது.
உக்ரேனுக்குச் சவால்மிகுந்த இந்தக் காலகட்டத்தில் ராணுவ, குடிமைத் தலைமைத்துவத்திற்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதை இந்தக் கருத்துகள் காட்டுகின்றன.
தேசியத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவர் இஹோர் ஸோவ்க்வா, ரஷ்யாவுக்கு எதிரான போரில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக ஜெனரல் வேலரி ஸலுஸ்னி கூறிய கருத்து, ரஷ்யாவின் வேலையை எளிதாக்கிவிடும் எனக் கருதினார்.
ராணுவத் தளபதியின் கருத்துகள் உக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் சொன்னார்.
அதே நேரத்தில், ராணுவத் தளபதியின் கருத்துகளை விமர்சித்த அதிபர் ஸெலென்ஸ்கி, “காலம் கடந்துவிட்டது. மக்கள் சோர்வடைந்துள்ளனர். இது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், போர் நிலைகுத்தி நின்றுவிட்டதாக இது அர்த்தமாகாது,” என்று வலியுறுத்தினார்.
போரை முன்னெடுத்துச் செல்ல உக்ரேன் அதன் முயற்சியில் தடுமாறிவரும் வேளையில் ராணுவத் தளபதிக்கும் அதிபருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
உக்ரேனிய ராணுவ நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
மேற்கத்திய நட்பு நாடுகளின் கவனம் தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் பூசல்மீது திரும்பியுள்ளது குறித்தும் உக்ரேன் கவலையுறுவதாக அதிபர் ஸெலென்ஸ்கி சனிக்கிழமை கூறினார்.