காஸா/ரமலா: போர் நிறுத்தத்துக்காக அனைத்துலக அளவில் அழுத்தம் அதிகரித்துவந்தாலும் இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
நெருக்கடி நிலையால் லெபனானில் பிரச்சினை அதிகமாக, அந்த மிரட்டலைக் கட்டுப்படுத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் முயன்று வரும் நிலையில், காஸா நகரை தன் படைகள் சூழ்ந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேலிடமிருந்து காஸா ஞாயிற்றுக்கிழமையன்று ‘இதற்குமுன் இல்லாத அளவுக்கு குண்டுவீச்சுகளால் தாக்கப்பட்டதாக’ ‘வாஃபா’ எனும் பாலஸ்தீனத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே, அனைத்து தொடர்புச் சேவைகளும் இணையச் சேவைகளும் மீண்டும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனமான ‘பால்டெல்’ தெரிவித்துள்ளது.
பிளிங்கனுடன் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சந்தித்தபோது, உடனடி போர் நிறுத்தம் தொடர்பில் அனைத்துலக அளவில் வந்த அழைப்பை அவரும் விடுத்தார்.
போர் நிறுத்தம் ஹமாசுக்குத் துணைபோகும் என்று அமெரிக்காவின் கவலை குறித்து திரு பிளிங்கன் மீண்டும் சுட்டிக்காட்டியபோது, அது இயலாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறிவிட்டார்.
ஹமாஸ் அமைப்பினரால் பிணை பிடிக்கப்பட்டோரை விடுவிக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“பிணைக்கைதிகளை விடுவித்தால்தான் போர் நிறுத்தம் இருக்கும். இது அகராதியிலிருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும்,” என்று திரு நெட்டன்யாகு கூறினார்.
இதற்கிடையே, காஸாவின் முக்கிய நகரை இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்துவிட்டதாக ராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலியத் தாக்குதலால் லெபனானில் மூன்று சிறுவர்களும் அவர்களின் பாட்டியும் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டுடனான பதற்றநிலை அதிகரித்துள்ளதாக லெபனானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் டிரோன் ஒன்றை இஸ்ரேலிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தலைமை ராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வட இஸ்ரேலின் கிர்யாட் ஷமோனா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது.