இந்தோனீசியாவில் பயங்கரவாதத் தாக்குதல் அபாயம்

எதிர்வரும் அதிபர் தேர்தல், இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகியவை உணர்ச்சிகளைத் தூண்டி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வழிவிடலாம் என்ற அச்சம் நிலவுகிறது

இந்தோனீசியாவில் பயங்கரவாதத் தாக்குதல் அபாயம்

1 mins read
7aaab001-6a2c-4c98-a91e-a32c25411d55
காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தேசிய நினைவுச்சின்னத்தில் மக்கள் திரளாகக் கூடினர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இஸ்ரேல்-ஹமாஸ் போர், சர்ச்சை மிகுந்த எதிர்வரும் அதிபர் தேர்தல் ஆகியவை பதற்றமான சூழலை உருவாக்கி உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வழிவகுத்து பயங்கரவாதத் தாக்குதல் அபாயத்தை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தோனீசியாவில் அண்மையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை குலைக்கும் விதமாக தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக 59 பேர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாதிகளைக் கைது செய்வது இத்துடன் முடிவுறாது என பாதுகாப்பு நிபுணர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை குலைக்க காவல்துறை நிலையங்களைத் தாக்க சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினர் கூறுகின்றனர்.

அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெற்ற இந்த கைது நடவடிக்கைகளைப் பற்றிக் கூறும் டென்சஸ் 88 என்ற பெயர்கொண்ட பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறையினர், அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், குண்டுகள் செய்ய உதவியாக இருக்கும் ரசாயனப் பொருள்களுடன் பிரச்சார கையேடுகளும் கைப்பற்றப்பட்டதாக விளக்குகின்றனர்.

இந்தோனீசியாவில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் போராளிக் குழுக்களின் அச்சுறுத்தல் கணிசமாகக் குறைந்துள்ள போதிலும் அண்மைய கைதுகள் பயங்கரவாாத அச்சுறுத்தல் நாட்டில் இன்னமும் நிலவுவதைக் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்தோனீசியாவில் 2002ஆம் ஆண்டு பாலி தீவில் பரவலான பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றது இங்கு நினைவுகூரத்தக்கது. அந்தத் தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்