ஜெனீவா: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் பயங்கரமாக மாறி வருகிறது என்று ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தப் போரில் காசா வட்டாரத்தில் செயல்படும் ‘யுஎன்ஆர்டபிள்யுஏ’ எனும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா உதவி அமைப்பின் 89 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இது, ஐநா வரலாற்றில் அதன் ஊழியர்கள் கொல்லப்பட்ட மிக மோசமான போர். பல ஊழியர்களின் குடும்பத்தினரும் உயிரிழந்தனர் என்று அவர் கூறினார்.
காசாவில் ஏராளமான பாலஸ்தீனர்களை ஐநா வேலைக்கு அமர்த்தியிருக்கிறது.
சென்ற ஞாயிற்றுக் கிழமை ஐநா தலைவர்களும் இதர மனிதாபிமான அமைப்புகளும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன.
அதில், “போதும் போதும், இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,” என்று போர் நிறுத்தத்துக்கு அவை அழைப்பு விடுத்திருந்தன.
போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு அதிர்ச்சியும் கவலையும் தெரிவிக்கப்பட்டது. பிணைப் பிடிக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தியது.
கடந்த அக்டோபரில் இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதைத் தொடர்ந்து போர் மூண்டது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேல், ஹமாஸ் மீது பதிலடித் தாக்குதல் தொடங்கியதிலிருந்து சுகாதாரப் பராமரிப்புகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. உதவி செய்த ஊழியர்களில் பலரும் கொல்லப்பட்டனர்.
ஐநா ஊழியர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசிய யுஎன்ஆர்டபிள்யுஏ பேச்சாளர், “ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது,” என்றார்.
வடக்கு, மத்திய, தெற்கு வட்டாரங்களில் ஆண், பெண் என வீட்டில் மற்றும் அகதிகள் முகாம்களில் உள்ளவர்களும் கொல்லப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.
ரொட்டிக்காக வரிசையில் காத்திருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார் என்று கூறிய அவர், வீட்டில் குழந்தை, எட்டு குழந்தைகளுடன் இருந்தவரும் கொல்லப்பட்டார் என்று கூறினார்.
பெரும்பாலானவர்கள் காஸாவில் உள்ள யுஎன்ஆர்டபிள்யுஏ அமைப்பின் பள்ளிகளில் வேலை பார்த்தவர்கள்.