மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பெர்சத்து, அன்வார் அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவது தொடர்பில் காவல் துறையிலும் ஊழல் தடுப்பு ஆணையத்திலும் புகார் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது.
அக்கட்சியினர் சிலர் அன்வாருக்கு ஆதரவளிப்பதற்காக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் அல்லது லஞ்சம் அளிக்கப்படுகிறது என்று பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் முகைதீன் யாசின் வியாழக்கிழமை கூறினார்.
அக்கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் அண்மையில் அன்வாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கூட்டணியை ஒன்றிணைத்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு அவருக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.
அவர்களில் இருவர் பெர்சத்துவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, கட்சிப் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள். மற்ற இருவரும் இதேபோன்ற தலைவிதியை சந்திக்க உள்ளனர் என்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் முகைதீன் கூறினார்.
இந்த நால்வருக்கும் அச்சுறுத்தல் அல்லது அவர்களின் ஆதரவிற்கு ஈடாக வளர்ச்சி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக முகைதீன் கூறியுள்ளார். இது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச்சட்டத்திற்கு எதிரானது. இதன் அடிப்படையில் காவல் துறையிலும் ஊழல் தடுப்பு ஆணையத்திலும் ஓரிரு நாட்களில் புகார் செய்யப்படும் என்றார் அவர்.
பொருளியல் மறுசீரமைப்புத் திட்டங்களையும் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்கும் திட்டங்களையும் நிறைவேற்ற, அதிகரித்த ஆதரவு அன்வாருக்கு உதவக்கூடும்.
ஆதரவு அதிகரிப்பதை நேர்மறையான போக்காகப் பார்க்க வேண்டும். மேலும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் என துணைப்பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளதாக பெர்னாமா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பெர்சத்துவைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருடப்பதாக பெர்சத்து கட்சியின் இளையர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மட் ஃபைசால் வெள்ளிக்கிழமை கூறினார்.
“என்னிடமும் கேட்டார்கள். ஆனால், நான் நிராகரித்துவிட்டேன்,” என்றார் அவர்.
“கட்சியின் அனைத்துப் பிரதிநிதிகளையும் சந்தித்து நிலைமையை விளக்கியுள்ளோம், இனிமேல் எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
அன்வாருக்கு ஆதரவளித்துள்ள பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர், தமது தொகுதிக்காக இதைச் செய்வதாகக் கூறினார் என்று பெர்னாமா கூறுகிறது.
மற்ற மூவரும் இதேபோன்ற காரணங்களைக் கூறியுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. அவர்களில் ஒருவர் தனது ஆதரவை மாற்றிய பின்னர் அவருக்கு அரசாங்க நிதி ஆதரவு கிடைத்ததாகக் கூறினார்.
கட்சி தாவல் தொடர்பில் மலேசியா விதித்துள்ள தடையில் உள்ள குறைபாடுகள் குறித்து மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தாம் பரிந்துரைக்கப் போவதாக முன்னாள் பிரதமர் முகைதீன் குறிப்பிட்டார்.
சட்டப்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினால் அவர்கள் உறுப்பினர் பதவி இழப்பர். தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். ஆனால், அன்வாருக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் அந்த நால்வருக்கு இது பொருந்தாது. அவர்கள் அன்வாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும் பெர்சத்து கட்சியிலேயே நீடிக்கிறார்கள்.