சிங்கப்பூர்: தகவல் தொழில்நுட்ப வேலை கொடுப்பதாகப் பொய் கூறி உகாண்டாவைச் சேர்ந்த திரு ஃபிரான்சிஸ் கமுகிஷா தென்கிழக்காசியாவுக்கு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அழைத்து வரப்பட்டார்.
அதற்கு முன்பு அவர் துபாயில் இருந்தார். அங்கு நிரந்தரமான வேலை கிடைக்காததால் திரு கமுகிஷா தென்கிழக்காசியாவுக்கு வந்தார். அவருக்கு மாதச் சம்பளமாக 1,500 அமெரிக்க டாலர் (S$2,040) தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வேலை மோசடிக் கும்பலிடம் சிக்கிய அவர் லாவோஸ், மியன்மாரில் உள்ள ஆலைகளில் தினமும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். அந்த ஆலைகளிலிருந்து தொழிலாளர்கள் தப்பிக்காமல் இருக்க பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
திரு கமுகிஷா லாவோஸ் தலைநகர் வியேன்தியேனை அடைந்தபோது இருவர் அவரை மியன்மார் எல்லைப் பகுதியில் உள்ள ஆலைக்குக் கொண்டு சென்றனர்.
ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை அங்கு திரு கமுகிஷா பார்த்ததும் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியிலிருந்து முரண்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர் வற்புறுத்தப்பட்டார்.
“நான் கையெழுத்திட மறுத்தேன். ஆனால் அவர்கள் எனது உடைமைகளை எடுத்துச் சென்றனர். அவற்றில் உனது கைப்பேசியும் கடப்பிதழும் அடங்கும். அங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டுமாயின் அவர்களுக்கு 16,000 யுவான் (S$3,030) செலுத்த வேண்டும் என்று கூறினர்.
“என்னிடம் பணம் இல்லை. எனவே, அந்த மோசடி வளாகத்தில் என்னை வேலை செய்யக் கட்டாயப்படுத்தினர்,” என்றார் திரு கமுகிஷா.
அங்கு இரண்டு மாதங்கள் இருந்த திரு கமுகிஷா, இன்னொரு மோசடி வளாகத்துக்கு அனுப்பப்பட்டார்.
அந்த இரண்டு ஆலைகளும் மியன்மார், தாய்லாந்து, லாவோஸ் எல்லைப் பகுதியில் இருந்தன.
அந்த இடத்தில் ஆட்கடத்தல், போதைப்பொருள் தயாரித்தல், சட்டவிரோத வனவிலங்கு விற்பனை ஆகியவை அதிகம் நடக்கின்றன.
தாம் வேறு வழியின்றி அங்கு வேலை செய்ததாக திரு கமுகிஷா கூறினார்.
மோசடி குற்றங்களில் ஈடுபட மறுத்தபோது கைத்தடியால் தாம் அடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நாள்தோறும் 18 மணி நேரம் வேலை செய்யும் நிலை அவருக்கு ஏற்பட்டது. விடுப்பு நாள் தரப்படவில்லை.
ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் மட்டுமே அங்குள்ள தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
“எங்கள்மீது மின்சாரம் பாய்ச்சி எழுப்புவார்கள்,” என்று திரு கமுகிஷா கூறினார்.
அழகான பெண்ணைப்போல் பாசாங்கு செய்து மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்க திரு கமுகிஷா கட்டாயப்படுத்தப்பட்டார்.
மோசடிக் கும்பலை நடத்தியவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றார் திரு கமுகிஷா.
ஐநா, தூதரகங்கள், அனைத்துலகக் காவல்துறை, மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றிடம் உதவி கேட்டு திரு கமுகிஷா குறுஞ்செய்திகள் அனுப்பினார்.
மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவற்றை கைப்பேசியிலிருந்து நீக்கியதாக அவர் கூறினார்.
தப்பிக்கும் நோக்குடன் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புகொண்டது குறித்து திரு கமுகிஷாவிடம் மோசடிக்காரர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திரு கமுகிஷா பதிலளிக்கவில்லை.
பிறகு அவரை அந்த மோசடிக்காரர்கள் ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்தது குறித்து ராணுவ அதிகாரிகள் தம்மிடம் விசாரணை நடத்தியதாக திரு கமுகிஷா தெரிவித்தார்.
“என்னைக் கைது செய்ய வேண்டாம் என்று நல்லுள்ளம் கொண்ட ஒருவர் அதிகாரிகளிடம் கூறி லாவோசுக்குச் செல்ல எனக்கு உதவினார்,” என்று திரு கமுகிஷா கூறினார்.
எந்த அமைப்பு தம்மைக் காப்பாற்றியது என்பது குறித்து இன்றுவரை தமக்குத் தெரியாது என்றார் அவர்.
ஆட்கடத்தலில் சிக்கி கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து திரு கமுகிஷா உகாண்டா திரும்பினார்.