கோலாலம்பூர்: தெப்ராவ் - சிங்கப்பூர் இடையிலான ஜோகூர் நீரிணையில் கடல் எல்லையை மறுவரையறை செய்யும் திட்டம் இல்லை என்று மலேசிய வெளியுறவுத் துணை அமைச்சர் முகமட் அலமின் கூறியுள்ளார்.
மலேசியாவும் சிங்கப்பூரும் 1995ல் வட்டார நீர் எல்லை தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டதாக வியாழக்கிழமை (நவம்பர் 15) நாடாளுமன்றக் கேள்விக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் அவர் தெரிவித்தார். இரு அரசாங்கங்களுக்கும் இடையிலான ஒரே கடல் எல்லை ஒப்பந்தமாக அது நீடிக்கும் என்றார் அவர்.
1927ல் கையெழுத்தான ஸ்ட்ரெய்ட்ஸ் குடியேற்ற ஒப்பந்தம், ஜோகூர் வட்டார நீர் ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடல் எல்லையைத் துல்லியமாக நிர்ணயிக்க இரு அரசாங்கங்களும் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்றார் அவர்.
முந்தைய வரையறை இன்னும் ஏற்புடையதாக இருப்பதால் சிங்கப்பூர்- ஜோகூர் கடற்பகுதிகளுக்கு இடையிலான எல்லையை மறுவரையறை செய்வது தேவையற்றது என்று தனது அமைச்சு கருதுவதாக முகமட் கூறினார்.