கியவ்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, 37 ரஷ்யக் குழுக்களுக்கும் 108 பேருக்கும் தடை விதித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரேன் போரின்போது உக்ரேனிலிருந்து சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டதையும் ரஷ்ய பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ள தாம் நோக்கம் கொண்டிருப்பதாக திரு ஸெலென்ஸ்கி கூறினார்.
உக்ரேனிய அதிபர் அலுவலகம், திரு ஸெலென்ஸ்கியின் கையொப்பத்துடன் கூடிய ஆணையை வெளியிட்ட பிறகு, சனிக்கிழமை இரவு அவர் நிகழ்த்திய காணொளி உரையில், “எங்கள் நாட்டின் நெருக்குதலை அவர்கள் மீது நாங்கள் ஏற்படுத்துகிறோம். தாங்கள் செய்த தவறுக்காக ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார்.
குறிப்பிட்ட தவறுகளுடன் குறிப்பிட்ட தனிநபர்களையோ குழுக்களையோ திரு ஸெலென்ஸ்கி தொடர்புபடுத்தவில்லை. அதிபர் அலுவலகம் வெளியிட்ட ஆணையில், தனிநபர்களுக்கு எதிராக 10 ஆண்டுத் தடையும் லாப நோக்கமற்ற குழுக்களுக்கு எதிராக ஐந்து ஆண்டுத் தடையும் விதிக்கப்பட்டது.
குடும்பத்தினரின் அனுமதியின்றி ஏறக்குறைய 20,000 சிறார்கள் ரஷ்யாவுக்கு அல்லது ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறும் உக்ரேன், இதைப் போர்க் குற்றம் எனக் கருதுகிறது.
யேல் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட ஆய்வு ஒன்றில், ஆறு வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 2,400க்கும் மேற்பட்ட சிறார்கள் ரஷ்ய நட்பு நாடான பெலரூசில் உள்ள 13 இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.