போர்ட் மோர்ஸ்பி: பாப்புவா நியூ கினியில் எரிமலை ஒன்று குமுறியதால் அந்நாட்டில் செவ்வாய்க்கிழமையன்று குடியிருப்பாளர்கள் சிலர் வீடுகளிலிருந்து வெளியேறத் தயாராகி வந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் குமுறிவரும் உலாவுன் எரிமலை அமைந்துள்ள நியூ பிரிட்டன் தீவைச் சேர்ந்தவர்கள். திங்கட்கிழமையன்று எரிமலை குமுறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு உதவ மீட்புக் குழுக்கள் அங்கே அனுப்பப்பட்டன. பேரிடர் நிர்வாக அதிகாரி கிளெமன்ட் பெய்லி இதைத் தெரிவித்ததாக பாப்புவா நியூ கினி அரசாங்கத்துக்குச் சொந்தமான என்பிசி பிஎன்ஜி ஊடகம் குறிப்பிட்டது.
நியூ பிரிட்டன் தீவில் உள்ள ஹொஸ்கின்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் எரிமலை தொடர்ந்து குமுறி வருவதாகவும் என்பிசி பிஎன்ஜி தெரிவித்தது.
பாப்புவா நியூ கினி, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. பசிபிக் வட்டாரத்தில் அமைந்துள்ள அப்பகுதியில் பல எரிமலைகள் இருக்கின்றன.