காஸா: காஸாவில் ஹமாஸ் போராளிகளிடம் சிக்கியுள்ள பிணைக் கைதிகள் நவம்பர் 24ஆம் தேதிக்குள்( வெள்ளிக்கிழமை) விடுவிக்க வாய்ப்பு இல்லை என்று இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
உடன்பாடு காணப்பட்டதால் நவம்பர் 23ஆம் தேதியே பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அவர்களது உறவினர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
நவம்பர் 22ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான உடன்பாடு காணப்பட்டது.
அதன்படி ஹமாஸிடம் உள்ள ஐம்பது பிணைக் கைதிகள் முதல் கட்டமாக விடுவிக்கப்படுவர். இதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களில் குறைந்தது 150 பேர் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்கியதைத் தொடர்ந்து தொடங்கிய போர் எப்போது நிறுத்தப்படும், எப்போது பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் என்பது குறித்து இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
நவம்பர் 23ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 10.00 மணிக்குத் தொடங்கும் என்று முன்னதாக எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
“பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தொடந்து நடைபெற்று வருகிறது,” என்று பிரதமர் நெட்டன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸாசி ஹானெக்பி தெரிவித்திருந்தார்.
“பிணைக் கைதிகளின் விடுவிப்பு இரு தரப்பிலும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தொடங்கும். ஆனால் வெள்ளிக்கிழமைக்கு முன்பு இருக்காது,” என்று ஹானெக்பி தெரிவித்தார்.

